பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருக்கும் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
நகைக்கடையையே தன் உடம்பிலே வைத்திருப்பது போல நகை அணிந்ததால் கவனத்தை ஈர்த்தவர் ஹரி நாடார். இவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். மேலும் சினிமாவிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021 மே மாதம் குற்ற வழக்கில் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.
அதே நேரத்தில் ஹரி நாடார் மீது கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழிலதிபர் மோசடி புகார் ஒன்றை தமிழக காவல்துறையினரிடம் வழங்கியிருந்தார். அந்த புகாரைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள ஹரி நாடாரை, இன்று காலை 11.15 மணி அளவில் கைது செய்தார்கள். புகார் அளித்து 22 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சம்பந்தப்பட்ட வழக்குகள் நடைபெறும் நீதிமன்றத்தில், ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர் படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.