மார்ச் 9ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்; பட்ஜெட்டிற்கு ரெடியாகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசு 2023-24ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார். அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி, கூட்டத்தொடர் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில் வரும் மார்ச் 9ஆம் தேதி முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய விஷயங்கள், புதிய திட்டங்கள், கொள்கை ரீதியிலான முடிவுகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். முன்னதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் மாநில பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர்.

பட்ஜெட்டிற்கு ஒப்புதல்

இது அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதை அடுத்தே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மகளிருக்கு உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி வரும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது தேர்தல் விதிமீறலாகவும் பார்க்கப்பட்டது வேறு கதை. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்களை கடந்துவிட்ட சூழலில், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

ரூ.1,000 உரிமைத் தொகை

இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து திமுகவை தாக்கி பேசி வருகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் நடப்பு பட்ஜெட்டில் ரூ.1,000 உரிமைத் தொகை குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கே உரிமைத் தொகை வழங்கப்படும். மற்றவர்களுக்கு கிடைக்காது என்ற பேச்சும் அடிபடுகிறது.

இளைஞர்களுக்கு அறிவிப்புகள்

மாநில அரசின் நிதி நிலைமை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசு தரப்பு கூறுகிறது. இத்தகைய சூழலில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதுதவிர இளைஞர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேளாண் பட்ஜெட்

மேலும் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும். முன்னதாக அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.