நகரங்களுக்கு பழங்கால பெயர்களை சூட்ட கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: கலாசாரம், ஆன்மிக நகரங்களுக்கு அவற்றின் பழைய பெயர்களை வைப்பதற்கு ஆணையம் அமைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நாட்டில் உள்ள பழங்கால, ஆன்மிக மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய பல நகரங்களின் பெயர்கள் அன்னிய நாட்டினரின் படையெடுப்பிற்கு பிறகு  மாற்றப்பட்டது. டெல்லியில் உள்ள மொகல் பூங்கா தற்போது அம்ரித் உத்யான் என ஒன்றிய அரசு மாற்றி உள்ளது. அதே போல் படையெடுப்பாளர்களால் பெயர் மாற்றப்பட்ட பல சாலைகள் இன்னும் உள்ளன. அந்த சாலைகளின் பெயர்கள் மாற்ற அவற்றின் பழைய பெயர்களை சூட்டுவதற்கென ஒரு ஆணையம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப்,பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில்,‘‘ நமதுநாடு மதசார்பற்ற நாடு. இது போன்ற மனுக்கள் பிரச்னைகளை உருவாக்கி நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.