புதுடெல்லி: கேள்வித்தாள் வெளியாகி விட்டதாக வதந்தி பரப்பினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது போலீஸ் நடவடிக்கை பாயும் என்று சிபிஎஸ்இ எச்சரித்து உள்ளது. 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கி விட்டன. ஏப்ரல் 5ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தநிலையில் சிபிஎஸ்இ கேள்வித்தாள் லீக்காகி விட்டதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிபிஎஸ்இ கேள்வித்தாள் யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வெளியாகி இருப்பதாக அடிக்கடி வதந்தி வரவி வருகிறது. இப்படி வதந்தி பரப்பும் நபர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றன. எனவே வதந்தியை பரப்புபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதுபற்றி டெல்லி காவல்துறையிடம் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்து உள்ளது. சட்டவிதிகள் படி உரிய பிரிவுகளின் கீழ் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் நடந்து வரும் போது இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் வதந்திகள் தொடர்பாக உஷாராக இருக்க பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த தகவல்களை நம்புவதோ அல்லது எந்தவொரு தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.