பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட ஆதார் எண் – மின் இணைப்பு எண் இணைப்பிற்கு இன்றே கடைசி நாள் என்பதால் மக்கள் அனைவரும், மாலைக்குள் இணைத்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
2 ஆயிரத்து 800 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி எனக் கூறப்பட்டது. ஆனால் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் மீண்டும், மீண்டும் அவகாசம் வழங்கி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே இன்று கடைசி நாள் என்றும், இனிமேல் அவகாசம் வழங்கப்படாது எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. இன்று மாலைக்குள் மின் இணைப்பு, ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.
newstm.in