வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அப்பாவுக்கு மத்திய அரசு உத்தியோகம் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரில் என் படிப்பு. 1981 ஆம் வருடம் அப்பாவுக்கு “எடப்பாடி”க்கு மாற்றலாகியது. எடப்பாடி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் என்னை சேர்க்க அப்பா அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் முதன்முதலாக அவளைப் பார்த்தேன்.
நின்று, கண்டு, மலைத்து
அடடா.. என்ன ஒரு அழகியவள்!
எனைக் கடந்து போனாள்..
கண் மலரக் கைகாட்டிச் சிரித்துக் காற்றதினிலே முத்தமமொன்றை பறக்க விட்டுப் போனாள்..
அப்பனின் கைப்பிடித்து பாங்காய் நடந்து சென்றாள்..
சிறிது நேரம் கழித்து பார்த்தால் என் வகுப்பில் என்அருகில்வந்து அமர்ந்தாள் (என்னவொரு விந்தை.)
. மாலையில் பார்த்தால் என் வீட்டிற்கு பக்கத்து வீடு தான் அவள் வீடு.(எட்டாவது அதிசயம்)
பிறகென்ன ஒரு அழகிய நட்பு அழகாய் துளிர ஆரம்பித்தது.
தூங்கும் நேரம் தவிர இருவரும் ஒன்றாகவே இருந்தோம்.
ஒன்றாகவே பள்ளிக்குச் சென்றோம். அவள் வீட்டில் பூக்கும் ரோஜாவை தினம் தினம் (பறித்து) எனக்காக எடுத்து ஓடிவருவாள். அவள் வீட்டில் ஆப்பமும் கடலைக்கறியும் செய்தால், சுடச்சுட எனக்காக தட்டில் வைத்து எடுத்து ஓடி வருவாள்.
பகிர்தலை அவளிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். என் அம்மா செய்யும் ஆனியன் ஊத்தப்பமும், தேங்காய் சட்னியும் அவளின் விருப்பம். அம்மாவிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவாள். அப்பா வாங்கி வரும் ரத்ன பாலா, அம்புலி மாமா பாலமித்ரா … படித்து ரசித்து… வாசிப்பின் நேசிப்பை கற்றுக் கொடுத்தவள்.
ரத்ன பாலா அட்டை படத்தின் கடைசி பக்கத்தில் இருக்கும் ‘பொம்மி’யை இருவரும் வரைந்து பார்த்ததெல்லாம் கண் முன்னே காட்சிகளாய் … ஒருமுறை ஓவிய நோட்டில் (நான் வரைய மறந்ததால்) வாழை மரத்தை அழகாக வரைந்துகொடுத்தாள். நானும் அப்படியே ஓவிய ஆசிரியைடம் காண்பிக்க .. வரைந்தது யார் ? என்று கேட்க? நான் பதில் சொல்லாமல் முழிக்க.. மது தானே வரைந்தாள் என ஆசிரியை கண்டுபிடித்து கேட்க.. இருவரும் பதில் சொல்லாததால் வகுப்பில் முட்டி போட சொல்ல…அழுகை அழுகையாக வந்தது .
எனக்கு வரைந்து கொடுக்க போய் அவளும் தண்டனை அனுபவித்தாளே என்று! இப்படியாக நட்பின் மகத்துவத்தை புரியவைத்தாள்..
சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் காலையில் அம்மா, ஒரு பக்கம் ஆங்கிலம் ஒரு பக்கம் தமிழ் எழுத சொல்ல, முதலில் எழுதுபவர்களுக்கு இரண்டும், இரண்டாவது எழுதுபவர்களுக்கு ஒன்றுமாக (பாராட்டி) வீட்டில் செய்த பாசிப்பருப்பு உருண்டைகளை கொடுப்பார்கள் .
என் கையெழுத்து அழகாக இருக்க காரணமானாள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு முதலில் எழுத முயற்சி செய்வோம். முயற்சியின் ருசியை அனுபவித்தது அவளிடமிருந்து தான்.
கலர் கலராய் கண்ணாடி வளையல்களை உடைத்து ஒன்று சேர்த்து விளையாடுவோம் . மிக நேர்த்தியாக உடை அணிவாள். அதைப் நேர்த்தியாக உடை அணியக் கற்றுக் கொடுத்தவள் அவளே.. எங்கள் தெருவில் இருந்த சக்தி ‘திரையரங்கில் படங்கள் பார்க்க ஒன்றாகத்தான் செல்வோம்.
நடந்து வருகையில் பார்த்த சினிமாக்களை பற்றி விமர்சனம் செய்து கொண்டே வருவோம். அதுதான் என்னை இன்று சினிமா விமர்சனம் எழுத தூண்டுகோலாக அமைந்தது என்றால் மிகை இல்லை. வரும்பொழுதே பரோட்டாவும் சால்னாவும் வாங்கி வந்து சுட சுட சாப்பிடுவோம்.
பரோட்டா ஒரு ரூபாய் தூக்குவாளி நிறைய சால்னா தருவார்கள். அந்தச் சுவையை இன்னமும் நான் எங்கும் சாப்பிடவில்லை அது தனி கதை. பிறிதொரு பதிவில் தொடர்கிறேன்.
வீட்டுவாயிலில் இருந்த வாதாம் மரத்துக் கொட்டைகளை உடைத்து “காக்கா கடி’ சாப்பிடதந்து.. பகிர்ந்தலை கற்றுக் கொடுத்தாள்.
அவள் மிக அழகாய் கதைச் சொல்லுவாள். அவள் கதை சொல்லும் போது அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வேலோடு முன் தோன்றிய விழிகளை கொண்டவள் அவள்”
மீனோ அவள் கண்ணெனத்
தூண்டி லிட்டேன்..
மாட்டியதென்னவோ நான் தான் ..(இன்று வரை அதிலிருந்து நான் விடுபடவில்லை)
(இன்று பட்டிமன்றம், கருத்தரங்கம் இப்படி பல மேடைகளில் நான் கதை சொல்லும் போதெல்லாம் அவளைத் தான் நினைத்துக் கொள்கிறேன். ஏற்ற இறக்கத்தோடு எப்படி கதை சொல்ல வேண்டும் மற்றவர்கள் ரசிக்கும்படியாக… என்று பாடம் எடுத்த ஆசான் அவள்!
இது எல்லாம் ஞாபகம் உள்ளதா மது?
எங்கிருக்கிறாய் மதுமதி?
உன்னை நானும் எங்கெங்கோ தேடுகிறேன். என் நினைவில் நீ இருப்பது போல் உன் நினைவில் நான் இருக்கிறேனா மது? இந்த 40 வருட காலத்தில் எத்தனையோ நட்புகள் வந்தபோதிலும் உன் நினைவு என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை . பாஸ்கர் அப்பா, லலிதா அத்தை சகோதரி சுதா, சுமா நலமா? நினைவுகள் நம்மை ஒன்று சேர்க்கும். நம்புகிறேன் மதுமதி.
கண் திறந்து பார்த்தேன்
தொலைவில் நீ …
கண்மூடிக் கொண்டேன்,
அடடா…
அதற்குள் எப்படி
இமைக்குள் வந்தாய்!
லவ்யூமது! லவ் யூ சோ மச்
இந்தப் பிரபஞ்சத்தில் நீ எங்கிருந்தாலும் என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்…
என்றென்றும் அன்புடன்
ஆதிரைவேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.