சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று நாளை மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் வலிநோக்கம் பகுதியில் 2 செ.மீ. மழையும், ராமநாதபுரம், மந்தம் பகுதிகளில் தலா 1செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.