மோகன்லால் படத்தை இயக்க விரும்பும் அர்ஜூன்

நடிகர் அர்ஜுன் 90களின் துவக்கத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்ததுடன் ஒரு இயக்குனராகவும் மாறி தனக்கு சரிவு ஏற்படும்போதெல்லாம் தன்னுடைய படங்களை இயக்கி தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டார். அந்தவகையில் கேசவன், ஜெய்ஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ள அர்ஜுன் தற்போது குணச்சித்திர நடிகராக மாறி முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வருகிறார். அதே சமயம் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்கியும் வருகிறார் அர்ஜூன்.

அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வந்த தெலுங்கு நடிகர் விஸ்வக் சென்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது புதிய கதாநாயகனை தேடிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். இந்த நிலையில் தனது மருமகன் முறையுள்ள கன்னட நடிகர் துருவா சார்ஜா நடிப்பில் வெளியாக இருக்கும் மார்ட்டின் என்கிற படத்திற்கு கதை எழுதியுள்ளார் அர்ஜுன். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அர்ஜுனும் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி கேரளாவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அர்ஜுன் பேசும்போது மோகன்லால் வைத்து ஒரு படம் இயக்குவதற்காக கதையை தயார் செய்து அதை அவரிடமும் கூறி விட்டேன் உடனடியாக அந்த படம் துவங்கப்படாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்தில் நிச்சயமாக மோகன்லால் படத்தை இயக்குவேன் என்று தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகி வெளியான ‛மரக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் மோகன்லாலுடன் முதன்முறையாக அர்ஜூன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.