திமுக முன்னாள் எம்பி கொலை வழக்கு! உடன்பிறப்புக்கு ஜாமீன் மறுப்பு! 

தி.மு.க. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில், முதல் குற்றவாளியான அவரின் தம்பி ஆதம்பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி திமுக முன்னாள் எம்,பி. மஸ்தான் மர்மமான முறையில் உயிரிழந்தார். மஸ்தானின் மரணம் குறித்து, அவரிடம் ஓட்டுநராக பணிபுரிந்த நெருங்கிய உறவினர் இம்ரான்பாஷா முதலில் தெரிவிக்கையில், காரில் செல்லும்போதே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது உயிரிழந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே தந்தையின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது மகன் ஹரிஸ் ஷாநவாஸ் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டுநர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணையில் மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மேலும், மஸ்தானின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தடய அறிவியல் துறை அறிக்கை தெரிவித்தது.

இந்த நிலையில், ஓட்டுநர் இம்ரான்பாஷா உள்ளிட்டவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்புடி விசாரணையில், மஸ்தான் கொலையில் அவரது தம்பி கவுஸ் ஆதம்பாஷாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் கோரி கவுஸ் ஆதம்பாஷா தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின்போது, மஸ்தானின் மகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குடும்ப பிரச்சினைக்காக அவரை கொலை செய்துள்ளனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிட்டார். போலீசார் தரப்பிலும், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.