வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியாங்யாங்: வட கொரியாவில், ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, பெற்றோர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியா ஒரு மர்ம பிரதேசமாகவும், இரும்புத்திரை போர்த்திய நாடாகவும் உள்ளது. இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். இங்கு, அதிபர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
தென் கொரியா உள்ளிட்ட அண்டைநாடுகளை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதால், அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் படங்களை தடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நாடு வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதன்படி, ஹாலிவுட் அல்லது தென்கொரிய படங்களை குழந்தைகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி பார்க்கும் குழந்தைகள், 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பெற்றோர்கள் 6 மாதம் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.
முந்தைய காலங்களில், குற்றம் நிரூபிக்கப்படும் பெற்றோர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இனிமேல் கருணை காட்டப்படாது எனவும் கூறப்பட்டு உள்ளதுடன், அதிபர் கிம் ஜோங் உன்னின் சமூக கொள்கைப்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement