புதுடெல்லி: டெல்லியில் மூன்றரை வயது குழந்தை விபத்தில் பலியான சம்பவத்தில், விமானப் படை அதிகாரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் அர்ஜன் விஹாரில் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மூன்றரை வயது பெண் குழந்தை சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த குழந்தையின் மீது அவ்வழியாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை படுகாயமடைந்ததால், அவர் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று முன்தினம் இறந்தது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்திய நிலையில், விபத்துக்கு காரணமான விமானப்படை அதிகாரியின் மகன் சமர்க் மாலிக் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘விபத்தில் இறந்த குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் பேரில், விமானப்படை அதிகாரியின் மகன் சமர்க் மாலிக் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. குழந்தை காயமடைந்த போது, அவரை மீட்டு அவரே மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இருந்தும் குழந்தை இறந்ததால் அவரை கைது செய்துள்ளோம். வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்’ என்றார்.