இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 வரையில் புதுடில்லியில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் ஆராயப்பட்டதுடன் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய மார்க்கங்கள் குறித்தும் இம்மாநாட்டில் அடையாளங்காணப்பட்டது.
2. இதேவேளை புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே அவர்கள் உரை ஒன்றினை நிகழ்த்தியிருந்தார். பாதுகாப்பு செயலாளர் அவர்களும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண அவர்களும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிகளைப் பெற்றிருந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் 2023 பெப்ரவரி 24 ஆம் திகதி அருள்மிகு திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்திய கடற்படையின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி அவர்களையும் மும்பையில் அவர்கள் சந்தித்திருந்தனர்.
3. பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள், பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் ‘பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (SAGAR) என்ற இலக்கினை உறுதி செய்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து ஆராய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு குறித்த பேச்சுகளே வருடாந்த பாதுகாப்பு மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.