பூக்கள் வரத்து அதிகரிப்பால் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை: சேலம் மக்கள் மகிழ்ச்சி

சேலம்: வஉசி பூ மார்க்கெட்டில் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.500 விலை சரிந்து விற்றதால், பொதுமக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வ.ஊசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.3000 வரை விற்கப்பட்டது. இந்த மாதத்தில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.1200 முதல் ரூ.800 வரை விலையில் விற்பனையானது. தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், குண்டு மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்வுற்று, ஆர்வமுடன் பூக்களை வாங்கி சென்று வருகின்றனர்.

சேலம் வஉசி. பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை நிலவரம் (ஒரு கிலோ கணக்கில்) : குண்டு மல்லி – ரூ.500, முல்லை – ரூ.800, ஜாதி மல்லி – ரூ.500, காக்கட்டான் – ரூ.100, கலர் காக்கட்டான் – ரூ.140, மலை காக்கட்டான் – ரூ.80, சி.நந்தியா வட்டம் – ரூ.100, சம்பங்கி – ரூ.30, சாதா சம்பங்கி – ரூ.50, அரளி – ரூ.80, வெள்ளை அரளி – ரூ.80, மஞ்சள் அரளி – ரூ.80, செவ்வரளி – ரூ.140, ஐ.செவ்வரளி – ரூ.90, நந்தியா வட்டம் – ரூ.30 விலையில் விற்பனையானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.