"இங்கேதான் என் வாழ்க்கை தொடங்கியது!"- வான்கடே ஸ்டேடியத்தில் தன் சிலை அமைவது குறித்து சச்சின்

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை தன் வசமாக்கிப் புகழ்பெற்ற நட்சத்திர வீரராக, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சச்சின். 1998ம் ஆண்டு 15வது வயதில் மகாராஷ்டிர மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பித்த அவரது கிரிக்கெட் பயணம், அவரது 39வது வயதில் 2012ம் ஆண்டு அதே வான்கடே மைதானத்தில் கண்ணீருடன் விடைபெற்றது.

வான்கடே மைதானம்

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த சச்சின் வரும் ஏப்ரல் 24ம் தேதி தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில் சச்சினின் வாழ்நாள் சாதனைகளை நினைவுகூரும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் சச்சினின் உருவச்சிலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம். இந்தச் சிலை இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையின் போது திறக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று தன் மனைவியுடன் வான்கடே மைதானத்தில் சிலை அமைப்பது பற்றிப் பார்வையிட்ட சச்சின், தனக்கு அமைக்கவிருக்கிற சிலை பற்றிப் பேசுகையில், “இது எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது. இதே வான்கடே மைதானத்தில்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். என் முதல் ரஞ்சிப் போட்டியை இங்குதான் விளையாடினேன். நீண்ட காலத்திற்கு முன்பு, என் பயிற்சியாளரான அச்ரேக்கர் சார் என்னை இங்கே திட்டினார், அது என்னைத் தீவிர கிரிக்கெட் வீரனாக மாற்றியது.

இங்கேயேதான் என் கடைசி போட்டியையும் விளையாடினேன். என் வாழ்க்கை ஒரு வட்டத்தைப்போல இங்கே தொடங்கி இங்கேயே நிறைவடைந்தது என்று கூறலாம். இங்கு எனக்கு நிறைய அற்புதமான நினைவுகள் இருக்கின்றன. இங்கு நடந்த மறக்கமுடியாத மிகப்பெரிய நல்ல தருணங்கள் என் வாழ்வில் நீங்கா நினைவுகளாக இருப்பவை” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.