போலி வீடியோ பரப்பிய டெல்லி பாஜக பிரமுகர்: முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம்!

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல் போலி வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்ஜாமின் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி பீகார் மாநில தொழிலாளர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்து பிஹார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், வந்த தகவலை ரீ ட்வீட் செய்துள்ளதாகவும் இதில் எந்த உட்கருத்தும் இல்லை என்றும், தான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து எனவே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எனவே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆகையால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழலும் நிலவியது என்று கூறினார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.