
100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் நிலையில், அதில் ஊதிய உயர்வை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
newstm.in