நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் கடந்த சில வருடங்களாக வெண் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இரண்டு பன்றிகள் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர் இறந்த பன்றிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்க வைரஸ் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பண்ணையில் சோதனை செய்ததில் இருபது பன்றிகளுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அதிகாரிகள் அந்த பன்றிகளை குழி தோண்டி புதைப்பதற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து பன்றி பண்ணை இருந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன் படி, கால்நடை துறையினர் பன்னிரண்டு பேர் நேற்று கவச உடை அணிந்து பன்றி பண்ணைக்கு வந்து, பன்றிகளை அழித்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழமாக குழி தோண்டி மூடியுள்ளனர்.
மேலும் பன்றி பண்ணை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல 1 வருடத்திற்கு தடை விதித்து அதற்கான அறிவிப்பு பேனரையும் அதிகாரிகள் வைத்து விட்டு சென்றனர்.