சென்னை: Rohini Theatre Controversy (ரோகிணி தியேட்டர் சர்ச்சை) குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சமமாய் மதித்து இருக்கை தர வேண்டும் என்று 2000த்தில் தேசிய விருது வென்ற ஹவுஸ் ஃபுல் என்ற என் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன் என பார்த்திபன் ட்வீட் செய்திருக்கிறார்.
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ரிலீஸான பத்து தல
பத்து தல படம் கடந்த 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் பத்து தல ரிலீஸான திரையரங்குகள் முன் குவிந்தனர். கட் அவுட்டுகள் வைத்தும், சிம்புவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடியும் உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. மஃப்டி படம் போல பத்த தல இல்லை என ரசிகர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.

நரிக்குறவர்களை உள்ளே விடாத ரோகிணி தியேட்டர்
சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல ரிலீஸானது. படம் ர்லீஸான அன்று காலை 8 மணி காட்சியை பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் சென்றிருந்தனர். அவர்களிடம் டிக்கெட் இருந்தும் தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.

கடும் கண்டனங்களும், வழக்குப்பதிவும்
ரோகிணி தியேட்டரின் ஊழியர்கள் செய்த இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுப்பப்பட்டது. ரோகிணி திரையரங்கமும் மழுப்பலான விளக்கத்தையே கொடுத்தது. இதனால் #boycottRohinitheatre என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது. இதற்கிடையே நரிக்குறவர்களை உள்ளே விடாதவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

பார்த்திபன் ட்வீட்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிடவேண்டாம். சமமாய் மதித்து இருக்கை தர வேண்டும் என்று 2000த்தில் தேசிய விருது வென்ற ஹவுஸ் ஃபுல் என்ற என் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்தக் காட்சியையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

ரோகிணி தியேட்டரின் முதல் விளக்கம்
முன்னதாக, ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் நிகிலேஷ் முதலில் அளித்த விளக்கத்தில், “இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்” என கூறியிருக்கிறார். இருந்தாலும் ரோகிணி திரையரங்கம் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என பலரும் ரோகிணி திரையரங்கத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

ரோகிணி தியேட்டர் அளித்த விளக்கம்
அதனைத் தொடர்ந்து அளித்த மற்றொரு விளக்கத்தில், “பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 2 முதல் 10 வயது குழந்தைகளுடன் வந்தவர்களைத்தான் எங்கள் ஊழியர் தடுத்து நிறுத்தினார். ஆனால் இந்த விஷயத்தை சென்சிடிவ் பிரச்னையாக மாற்ற சிலர் நினைத்தனர்” என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.