புதுடில்லி :தங்களுடைய தயாரிப்பான, ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசியை, ‘பூஸ்டர் டோசாக’ பயன்படுத்துவதற்காக, ‘கோவின்’ இணையதளத்தில் இணைக்கும்படி, ‘சீரம் இந்தியா’ நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் சார்பில், ‘கோவிஷீல்ட்’ என்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் சார்பில், ‘கோவாக்சின்’ தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
இந்த இரண்டு தடுப்பூசிகளே நம் நாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வயதினருக்கும், இரண்டு டோஸ்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் எனப்படும் முன்னெச்சரிக்கை டோஸ்
ஆக இவை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘நோவாவாக்ஸ்’ நிறுவனத்தின், கோவோவாக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கும் உரிமத்தை சீரம் இந்தியா பெற்றுள்ளது.
இதை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தற்போது சற்று அதிகரித்துள்ள நிலையில், சீரம் இந்தியா சார்பில், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுஉள்ளது.
‘கோவோவாக்ஸ் தடுப்பூசியை, பூஸ்டர் டோசாக பயன்படுத்தும் வகையில், மத்திய அரசின், கோவின் இணையதளத்தில் அதை இணைக்க வேண்டும்’ என, கடிதத்தில் கூறப்பட்டு
உள்ளது.