காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்: பாஜக வீடியோ வெளியீடு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு இப்போதே தொடங்கியுள்ளது.

இதன்படி பாஜகவின் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் ஃபைல்ஸ் முதல் பாகம்’’ என்ற தலைப்பில் நேற்று வீடியோ வெளியிடப்பட்டது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. வீடியோவில் கூறியிருப்பதாவது:

வளர்ச்சி பாதிப்பு

காங்கிரஸின் மறுபெயர் ஊழல். அந்த கட்சியின் 70 ஆண்டு கால ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. இது மக்களின் பணம். இந்த பணத்தை காங்கிரஸ் சுருட்டியுள்ளது. காங்கிரஸ் ஊழலில் சுருட்டிய பணத்தின் மூலம் 24 ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல்கள், 300 ரஃபேல் போர் விமானங்களை உருவாக்க, வாங்க முடியும். 1000 மங்கள்யான் திட்டங்களை செயல்படுத்த முடியும். காங்கிரஸின் ஊழல்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்த 10 ஆண்டுகள் தொலைந்துபோன காலமாக கருதப்படுகிறது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் பல்கிப் பெருகின. ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து நாளிதழ்களிலும் ஊழல் செய்திகள் நிறைந்திருந்தன. இதன் காரணமாக ஒவ்வொரு இந்தியரும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல், ரூ.1.76 லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல், ரூ.10,000 கோடி நூறு நாள் வேலை திட்டஊழல், ரூ.70,000 கோடி காமன்வெல்த் ஊழல், ரூ.362 கோடி ஹெலிகாப்டர் ஊழல், ரூ.12 கோடி ரயில்வே வாரிய ஊழல் என மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஊழலில் மூழ்கியிருந்தது.

இப்போதைய வீடியோ காங்கிரஸ் ஊழல்களின் வெள்ளோட்டம் மட்டுமே. படம் இன்னும் முடியவில்லை. இவ்வாறு பாஜக வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.