மம்தா அரசு கவிழும்: அமித் ஷா சொன்ன ஆருடம் – பின்னணி என்ன?

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டம் சூரியில் பாஜக அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா மம்தா அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது பேசிய அவர், ‘மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்க முதல்வராக தனது மருமகனை கொண்டு வரும் கனவில் மம்தா இருக்கிறார். 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே மம்தாவின் ஆட்சி கவிழ்ந்து விடும். 2024 நடைபெறும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 35 இடங்களில் வெற்றியை தாருங்கள். ஊழல், பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க பாஜவை சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக வருவார்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றியது. இவ்வளவு பெரிய மாற்றம் நடந்தது எப்படி? செல்வாக்கு மிக்க நபர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு சில ஆசை வார்த்தைகள் காண்பித்து பாஜகவுக்கு இழுத்து வருவது அக்கட்சியின் ஃபார்முலாவாக இருக்கிறது என்கிறார்கள். பல மாநிலங்களில் இதை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அந்த வகையில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு கொண்டு வரப்பட்டன. பிற கட்சிகளில் இருந்தும் ஆள்கள் பாஜகவுக்கு நகர்த்தி வரப்பட்டனர். 2016 தேர்தலில் சிபிஎம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2021 தேர்தலில் ஒரு இடத்தில் கூட அக்கட்சிகள் வெற்றி பெறவில்லை.

இது ஒருபுறமிருக்க தேர்தல் முடிந்த பின்னர் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசும் சம்பவங்களும் இந்தியாவில் சில மாநிலங்களில் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து அவர்கள் உதவியுடன் ஆட்சியை நடத்தியது. இந்த சூழலில் ஏக் நாத் ஷிண்டே மூலம் சிவ சேனா கட்சியே உடைந்து முதல்வர் பதவி கைமாறியது.

எனவே பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்த, மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்ப அமித் ஷா உணர்ச்சி பொங்க ஏதாவது பேசுகிறார் என்று அவ்வளவு சாதாரணமாக அவரது பேச்சை எடுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.