ராணுவ நிலம் மோசடியாக விற்பனை – ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகாரி உட்பட 7 பேர் கைது

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி யில் ராணுவத்துக்கு சொந்தமான இடம் உட்பட பல ஏக்கர் நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், பிஹார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சுமார் 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது ஜார்க்கண்ட் மாநில சமூக நலத்துறை இயக்குநர் சாகவி ரஞ்சன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியான அவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்து 10 பைகளில் முக்கிய ஆவணங்களை வீட்டில் இருந்து வெளியே எடுத்து சென்றுவிட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த சூழலில் ராஞ்சியை சேர்ந்த வருவாய் துறை மூத்த அதிகாரி பானு பிரதாப் பிரசாத் மற்றும் அஸ்கர் அலி, இம்தியாஸ் அகமது, பிரதீப் பாக்சி, சதாம் ஹூசைன், தல்கா கான், பயாஸ் கான் உள்ளிட்ட 7 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதில் அஸ்கர் அலி என்பவர் மட்டும் ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்களை மோசடியாக விற்றி ருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜார்க்கண்டில் தற்போது முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசு ஆட்சிநடத்தி வருகிறது. நில மோசடிவழக்கில் ஆளும் கூட்டணியைசேர்ந்த பலருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. விரைவில் அவர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.