கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் ஷூவை அவரது உதவியாளரான டபேதார் (டவாலி) கையில் எடுத்து சென்ற வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷ்ரவன் குமார் ஜடாவத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுபற்றி கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வீடியோ வெளியிட்டு தன்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரபலமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து திருநங்கைகள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், எஸ்பி மோகன்ராஜ் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது கோவிலுக்குள் செல்வதற்காக ஷ்ரவன் குமார் ஜடாவத் ஷூவை வெளியே கழற்றினார். மேலும் உதவியாளரை அழைத்து ஷூவை அப்புறப்படுத்தும்படி கூறினார். அப்போது உதவியாளரான டவாலியை(டபேதார்) வேகமாக ஓடிவந்து ஷூவை கையில் தூக்கி சென்றார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்வேறு தரப்பினர் ஷ்ரவன் குமார் ஜடாவத் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் தான் நடந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியுள்ளதாவது:
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசுகிறேன். கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான வதந்திகள் பரவியிருந்ததை பார்த்தேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் வரும் மே 2ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நானும், மாவட்ட எஸ்பியும் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஏப்ரல் 11ம் தேதி சென்றிருந்தோம்.
கோவில் வளாகத்துக்கு அருகில் போகும்போது, வாளாகத்துக்குள்ளே எல்லோருடைய காலணிகளையும் பார்த்த நான், இதனை அப்புறப்படுத்த சொல்லிவிட்டு கோயில் உள்ளே சென்றுவிட்டேன். பின்னால் வந்த என்னுடைய உதவியாளர், என்னுடைய காலணியை எடுத்துக்கொண்டு போனதை தெரிந்து கொண்டு, அவரை அழைத்து இது போல செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினேன். இந்த சம்பவத்துக்கு நான் மிகவும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.