சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக கொண்டாப்படுகிறார்.
முன்னதாக அவரது திரையுலகின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார்.
அப்போது அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்களில் பிரபல வில்லன் நடிகர் செந்தாமரையும் ஒருவர்.
இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், ரஜினியின் குடும்ப பிரச்சினையில் நடிகர் செந்தாமரை அதிரடியாக பேசிய சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது.
ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் மூன்று முகம். ரஜினி போலீஸ் உட்பட 3 கெட்டப்புகளில் மிரட்டியிருப்பார். இந்தப் படத்தில் நடிகர் செந்தாமரையின் வில்லத்தனமான நடிப்பு, இப்போதும் ரசிகர்களை சிலர்க்க வைக்கும். இந்நிலையில், ரஜினியும் செந்தாமரையும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி கெளசல்யா மனம் திறந்துள்ளார். பிரபல நடிகையான கெளசல்யா, யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது ரஜினி – செந்தாமரை நட்பு குறித்தும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். கவிக்குயில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது, சாதாரணமான மது அருந்திக்கொண்டிருந்தாராம் ரஜினி. செந்தாமரை அவரை “வா ஸ்காட்ச் சாப்பிடலாம்” என அழைத்துள்ளார்.
உடனே இப்போ ஸ்காட்ச் சாப்பிடலாம், இது தினமும் கிடைக்காது என ரஜினி மறுத்துள்ளாராம். ஆனால், செந்தாமரை உரிமையோடு ஸ்காட்ச்சை கொடுத்ததால் ரஜினி நண்பராக பழக தொடங்கியுள்ளார். அப்போது ரஜினிக்கும் அவரது மனைவி லதாவுக்கும் இடையே எதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் ரஜினி மீது தவறு இருப்பது தெரிந்ததால், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து திட்டியுள்ளாராம் செந்தாமரை.
“உன் மீது தவறு இருக்கு போது நீ அதைத் திருத்திக்கொள், எனக்குப் பட வாய்ப்புக் கிடைக்காமல் போனாலும் போகட்டும்” என உரிமையோடு ரஜினியைக் கண்டித்தாராம் செந்தாமரை. உடனடியாக ரஜினியும் மனைவி லதாவை வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டாராம். இதனைப் பார்த்த இயக்குநர் எஸ்பி முத்துராமன் இந்த சம்பவத்தை ரொம்பவே வியப்புடன் கெளசல்யாவிடம் கூறியுள்ளார். அந்தளவுக்கு ரஜினியுடன் மிக நெருங்கிய நட்பில் இருந்துள்ளார் செந்தாமரை.
அதேபோல், ரஜினியுடன் ந்டிக்கும் போது ரொம்பவே ஜாக்கிரதையாக இருப்பாராம் செந்தாமரை. என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், படப்பிடிப்பில் இருவருமே போட்டிப் போட்டுக்கொண்டு நடிப்பார்களாம். ரஜினி – செந்தாமரை இருவருக்கும் இப்படியொரு நெருங்கிய நட்பு இருந்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.