விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி..!!

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 35,941 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக் கடைகளுகம், 9,923 பகுதிநேரக் கடைகளும் அடங்கும். அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் விலைக் கடைகளை புனரமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 5,784 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக 5 ஆயிரம் ரேஷன் கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிதாக கட்டப்படும் அனைத்து ரேஷன் கடைகளும் கழிப்பறைகளுடன் கட்டப்படுகின்றன. ஒராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அரசின் கொள்கை ரீதியான அறிவிப்பு உள்ளது. இது தொடர்பாக பணியாளர்களின் நலனை கருத்திற்கொண்டு நிர்வாக ரீதியான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளின் பரிவர்த்தனைகள், யூபிஐ, போன் பேங்கிங் போன்ற பரிவர்த்தனைகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் பல்நோக்கு சேவை மையங்களாக மேம்படுத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய உள்ளோம். கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.