16வது ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, அகமதாபாத், கொல்காத்தா ஹைதராபாத் உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், பிலிப் சால்ட் உள்ளிட்ட சிலரின் 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அவர்களின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்து காணாமல் போயிருக்கிறது. கடந்த ஞாயிறன்று டெல்லி திரும்பிய அணியினரின் கிட் பேக்குகள் ஒரு தனியார் நிறுவனம் மூலம் அங்குக் கொண்டு வரப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படி வந்து இறங்கிய மொத்த உபகரணங்களில் இவை மட்டும் காணாமல் போயிருக்கின்றன.

காணாமல் போன பேட்டுகளில் மூன்று டேவிட் வார்னருக்கும், இரண்டு மிட்செல் மார்ஷுக்கும், மூன்று பில் சால்ட்டிற்கும், ஐந்து யஷ் துல்லுக்கும் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறைக்குப் புகாரும் அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று டெல்லி கேபிடல்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தங்களின் 5வது தோல்வியைப் பதிவு செய்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ். புள்ளிப்பட்டியலில் கணக்கையே தொடங்காத ஓர் அணியாகக் கடைசி இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.