டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்காக அதன் தலைவர் ராதாரவியின் தலைமையில் இறகுப்பந்து போட்டி, சமீபத்தில் சென்னையில் நடந்தது. ஆர்.கே.செல்வமணி, தீனா, இயக்குநர் ரங்கநாதன் உட்படப் பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இறகுப் பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கிய ஆர்.கே.செல்வமணி, விழாவில் பேசினார். “பல யூனியன்களிலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. சமீபத்தில் டப்பிங் யூனியனின் அலுவலகக் கட்டடம் மீது மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்குக் காரணம் வெளியாள் அல்ல. யூனியனுக்குள்ளேயே உள்ளவர்களின் துரோகம்தான் காரணம். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். என் மாறாத ஆதரவு என்றுமே யூனியனுக்குத்தான்.
ராதாரவி மீது விரோதம் இருந்தால் அவருடன் மோத வேண்டும். எத்தனையோ உறுப்பினர்களின் பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட அலுவலகத்தைப் பாதிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத துரோகச் செயல். இடித்துக் கட்டவிருக்கும் யூனியன் அலுவலகக் கட்டடத்தின் செலவிற்கு என் பங்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிக்கிறேன்” என்றும் பேசினார்.
பரிசு பெற்றவர்களை ராதாரவி, தீனா உட்படப் பலர் வாழ்த்திப் பேசினார்கள். மீண்டும் பெப்சி யூனியன் தலைவராக ஆர்.கே.செல்வமணி சமீபத்தில்தான் போட்டியில்லாமல் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.