கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தேபாரத் ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 25-ம் தேதி திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி 24-ம் தேதி மாலை கொச்சி வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அங்குள்ள ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் திருவனந்தபுரம் சென்று அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் வந்தது. மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் கேரளா வரும் பிரதமர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதனை படித்து அதிர்ச்சி அடைந்த மாநில பாஜக தலைவர் அந்த கடிதத்தை மாநில போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்திடம் அளித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து கேரளா வரும் பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் கொச்சியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டனர்.

எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் பெயரில் அந்தக் கடிதம் வந்துள்ளது. மேலும் மிரட்டல் கடிதம் எழுதியது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.