சென்னை : தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகராக இருக்கும் விக்ரம் தங்கலான் படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார்.
கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படத்திற்கு தங்கலான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் மற்றும் பா. ரஞ்சித் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் – ரஞ்சித் உரசலா?: இணையத்தில் புயலை கிளப்பி வரும் இந்த தகவல் குறித்து விளக்கி உள்ள சினிமா விமர்சகரான செய்யாறு பாலு, தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம், ரஞ்சித்திடம் தொடர்ந்து அடுத்து என்ன சீன், அடுத்த கதை என்ன என்று கேட்டதால், இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக பரவிய செய்தியை நானும் கேள்விப்பட்டேன். ஆனால், விக்ரம் கதை கேட்கும் போதே நூறு டவுட் கேட்பாரு, ஆனால், கதையை கேட்டுவிட்டால் இயக்குநரை முழுவதுமாக நம்பக்கூடியவர்.
கதை கேட்டாரா இல்லையா: அப்படி அவர் இயக்குநரை முழுசாக நம்பியதால் தான் ஐ, அன்னியன் போன்ற படங்களில் நடித்தார். ஐ படத்தில் வேறு யாராவது நடித்து இருந்தால் பாதி ஷூட்டிங்கிலேயே ஓடி இருப்பார்கள். ஆனால், தங்கலான் படத்தில் கேள்வி கேட்கிறார் என்றால், அதற்கு காரணம் துருவநட்சத்திரம், கோப்ரா படங்களின் பிரச்சனைத்தான், காரணமாக இருக்கும். கோப்ரா படத்தை பார்க்கும் போது விக்ரம் கதை கேட்டாரா, இல்லை என்ற சந்தேகம் நமக்கும் வரும்.
பிரச்சனைக்கு காரணம்: கோப்ரா படம் தோல்வி அடைந்த போது பலரும் கேட்ட கேள்வி, நடிக்கும் போதே கதை என்னவென்று தெரியாதா, இப்படி ஒரு படத்தில் நடித்துவிட்டாரே என்று ரசிகர்கள் புலம்பினார்கள். அதே போல துருவநட்சத்திரம் படத்தின் தாமதத்திற்கு கௌதம் மேனன் கதையே சொல்லாமல் படத்தை எடுத்ததுதான். இதனால், இருவருக்கு இடையேயும் மறைமுக விரிசல் ஏற்பட்டு தற்போது வரை படம் வெளியாகாமல் உள்ளது.

பயம்தான் காரணம்: பிரச்சனை, தோல்வி போன்றவற்றால் டென்ஷனான விக்ரம், படத்தின் ஒன் லைனை கேட்டு விட்டு நடிக்க சம்பதிக்கலாம். அதன்பிறகு இயக்குநர் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாததால்,தங்கலான் படப்பிடிப்பில் தொடர்ந்து கேள்வி கேட்கிறார். இது தோல்விப்படங்களால் நடிகருக்கு இயல்பாக வரும் பயம்தான். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துவிட்டதால், இனி பயப்படத் தேவையில்லை என் செய்யாறு பாலு பேட்டியில் விரிவாக பேசி உள்ளார்.
தங்கலான்: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.