இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணக்கட்டு காணாமல்போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில், விசாரணை கோட்டை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு
நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மத்திய வங்கி கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது மாடியில் உள்ள அலமாரியில் இருந்து இந்த பணம் காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று உடனடியாக முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், 23 அதிகாரிகளிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இது தவிர உயர் தொழில்நுட்ப சிசிடிவி கெமராக்களும் சோதனை செய்யப்பட்டுள்ளன.