பெங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முஸ்லிம்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது. காங்கிரஸ் தீவிரமாக இந்து தலைவர்களை தங்கள் கட்சிக்கு வரவேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியை குறை சொல்கிறது. எங்கள் கட்சி மீது குற்றம்சாட்டுகிறது. பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு இருக்கும் நல்லுறவை காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளும் இளைஞர் சமுதாயத்தினர் மூலம் தேவையற்ற நன்மைகளை தங்களது அரசியல் களத்தில் பெறுகின்றனர். பா.ஜனதா அரசு பில்லவா மேம்பாட்டு ஆணையத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. அதன்மூலம் சில குறிப்பிட்ட சாதிகளின் ஓட்டுகளை பெற முயற்சிக்கிறது. ஆனால் மக்கள் ஜனதா தளம்(எஸ்) மீதான நம்பிக்கையை மீண்டும் நிரூபிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.