
விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல்
'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தை இயக்கிய பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 7 சிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநரான பி. ஆறுமுக குமாரே தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் நகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். அவர்கள் படப்பிடிப்பை பார்வையிடுவதுடன். விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள். இதனால் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரஜினி நடித்த கபாலி படத்திற்கும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பை பாதியில் முடித்து திரும்பியது குறிப்பிடத்தக்கது.