சென்னை: கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் வரும் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த அனைவரும் ஊர் திரும்புவார்கள். வார இறுதி நாட்களான ஜூன் 9-ம் தேதி (நேற்று) முதல் 11-ம் தேதி (நாளை) வரையிலான 3 நாட்களில் அதிக அளவிலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள்.
இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வார இறுதி நாட்களில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு 650 பேருந்துகள், கோவை, மதுரை, சேலம் போன்ற இடங்களில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 850 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணிக்கலாம்.