மகேஷ்பாபுவை அடுத்து தியேட்டர்களைத் திறக்கும் அல்லு அர்ஜுன்

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பல நடிகர்கள் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ளார்கள். சிலர் ஸ்டுடியோக்களையும் நடத்தி வருகிறார்கள். அடுத்து தியேட்டர் தொழிலிலும் இறங்கியுள்ளார்கள். பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபு, ஏசியான் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைத் திறந்தார்.

அவரைத் தொடர்ந்து அடுத்து அதே நிறுவனத்துடன் இணைந்து ‛எஎஎ சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்க உள்ளார் 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுன். ஹைதராபாத்தில் ஏசியன் சத்யம் மால் என்ற மாலில் எஎஎ சினிமாஸ் ஐந்து தியேட்டர்களுடன் வரும் ஜுன் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதில் ஒரு தியேட்டர் எபிக் தியேட்டராக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அதிக தியேட்டர்கள் உள்ள மாநிலங்களாக தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை உள்ளன. தென்னிந்திய அளவில் அதிக வசூலை அள்ளும் திரையுலகமாக தெலுங்குத் திரையுலகம் உள்ளது. 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தினர் இந்திய அளவிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என இரண்டு முன்னணி நடிகர்கள் தியேட்டர்கள் தொழிலில் இறங்கியதைப் பார்த்து மேலும் சில நடிகர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.