மதுரை | பாண்டி கோயில் அருகே குப்பை கிடங்காக மாறும் நான்கு வழிச்சாலை – நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

மதுரை: மதுரை பாண்டி கோயில் சுற்றுச் சாலை முக்கிய சாலையாக மாறியுள்ளது. அதிக போக்குவரத்து மிகுந்த இச்சாலையின் முக்கியத்துவம் கருதி பாண்டி கோயில் அருகே சிவகங்கை சந்திப்பில் வாகன நெருக்கடியை தவிர்க்க, மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்குகீழ் மெகா ரவுண்டானா உருவாக்கப்பட்டது. இதன்மூலம் சிகவங்கை – மதுரை நகருக்குள் செல்லும் வாகனங்களும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சிக்னல், நெருக்கடியின்றி நிற்காமல் செல்கின்றன. இது தவிர, தென் மாவட்டங்களில் இருந்து மேலூர், திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், மேலூர் – ராமநாதபுரம், தென்மாவட்டங்களுக்கு போகும் அனைத்து வாகனங்களும் பாலத்திற்கு கீழே செல்லாமல் மேம்பாலத்தை பயன்படுத்திச் செல்கின்றன.

இந்நிலையில், மேலூர் மார்க்கமாக செல்லும் இடத்தில் மேம்பாலம் அருகே சாலையின் இடது புறம் குறிப்பிட்ட தூரம் திடீர் குப்பை கிடங்காக மறியுள்ளது. கட்டிட கழிவுகள் , அருகிலுள்ள மண்டபங்களில் சேகரமாக சாப்பாட்டு கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் அங்கு வந்து கொட்டுகின்றனர். இதன்மூலம் அப்பகுதி குப்பை கிடங்காக மாறியுள்ளது.

மேலும், அவ்வப்போது, குப்பையில் தீ வைப்பதால் கரும் புகை மூட்டம் சாலையில் பரவி, வாகன ஓட்டிகளை பாதித்து விபத்து அபாயமும் நேரிடுகிறது. ஒட்டல், சாப்பாட்டுக் கழிவுகளை அங்கு வீசப்படுவதால் துர்நாற்றமும் ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோரை முகம் சுளிக்கச் செய்கிறது. நான்கு வழிச்சாலையில் அதிக வாகனங்கள் செல்லு மிடத்தில் சாலையோரத்தில் குப்பை கிடங்கு உருவாகுவதை நெடுஞ்சாலைத்துறையினர் தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.