ஹைதராபாத்: வாடகை வீடுகளில் 16 பேர் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்கு மாடி வீட்டை உயர்த்த முயன்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையைவிட தாழ்வான நிலைக்கு மாறின. இதன்காரணமாக மழை பெய்தபோது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்தது.
இந்த சூழலில் அங்குள்ள 3 அடுக்கு மாடி வீட்டை சாலையைவிட சற்று மேலே உயர்த்தஅதன் உரிமையாளர் முடிவு செய்தார். அதற்காக ஹைட்ராலிக் இயந்திரத்தை வரவழைத்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை தனது வாடகை வீடுகளில் வசிக்கும்யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும், மாநகராட்சியிடம் உரியஅனுமதி பெறாமலும் ஹைட்ராலிக்கருவிகள் மூலம் 3 அடுக்குமாடி வீட்டை அடித்தளத்தில் இருந்து உயர்த்த உரிமையாளர் முயற்சி செய்தார்.
அப்போது 3 அடுக்கு மாடி கட்டிடம், பக்கத்தில் இருந்த மற்றொரு 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் மீது சாய்ந்தது. அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், குத்புலாபூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் கட்டிடத்தை தூக்கிய போது வாடகை வீடுகளில் 16 பேர் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து கட்டிட உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அடுக்கு மாடியைஇடிக்க ஹைதராபாத் மாநகராட்சி உத்தரவிட்டது. இதன்பேரில் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.