முரசொலி நில விவகாரம் | விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பதில் மனு

சென்னை: “பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 13-ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணக்கு வந்தபோது, தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையத்தின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்தது. அதில், பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பட்டியலின மக்களின் நலன்களை பாதுகாக்க, உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பெற்ற அரசியல் சாசன அமைப்பான ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. எனவே, நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.