அலகாபாத்: ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் அந்த படக்குழுவையும் அந்த படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரிய அதிகாரிகளையும் வச்சு விளாசி உள்ளது ஒட்டுமொத்த திரைத்துறையையே மிரள வைத்துள்ளது.
இந்தியர்கள் பல காலமாக கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கும் ராம பிரானின் ராமாயணக் கதையை பலர் சினிமாவாகவும் சீரியலாகவும் எடுத்து மக்களின் ஆதரவை பெற்றுள்ளனர்.
சிஜி தொழில்நுட்பத்தை வைத்து எடுத்தாலும், கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஒரு போதும் அவர்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை. ஆனால், பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படம் அதை செய்யத் தவறி விட்டதாக ராம பக்தர்கள் பலரும் அந்த படத்தை தடை செய்ய வேண்டுமென போர்க்கொடி தூக்கிய நிலையில், ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கலவரம் வெடிக்காதது பெரிய விஷயம்: ஆதிபுருஷ் படத்தில் ஏகப்பட்ட எல்லைகள் மீறப்பட்டு இருப்பதாகவும், இந்த படத்தை தணிக்கைக் குழு எப்படி பார்த்து சான்று அளித்தது. மக்களுக்கு இதன் மூலம் என்ன கருத்தை முன் வைக்க வருகின்றீர்கள். நல்லவேளையாக இந்த படத்தை பார்த்து விட்டு பெரும் கலவரம் ஏது வெடிக்காமல் இருப்பதே பெரிய விஷயம் தான் என அலகாபாத் நீதிமன்றம் ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக சொல்லியிருக்கும் கருத்து சினிமாத் துறையையே ஆட்டம் காண வைத்துள்ளது.
கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் ஒரு எல்லைக்கு மேல் சென்றால் எப்படி என்றும் பலரது நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் இந்த படத்தில் ராமர், சீதை மற்றும் அனுமன் கதாபாத்திரங்களை உருவாக்கியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி.
முட்டாள் இல்லை: படம் பார்க்கும் மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. கடவுள்கள் பற்றி எடுக்கப்படும் படங்களில் மத நம்பிக்கைகளை கெடுக்கும் வண்ணம் காட்சிகளை அமைக்கக் கூடாது என்றும் ஆதிபுருஷ் படத்தில் ஏகப்பட்ட தவறுகள் கொட்டிக் கிடப்பதாகவும் அலகாபாத் நீதிமன்றம் வெளுத்து வாங்கி உள்ளது.
அடல்ட் காட்சிகள்: 3டி படம் குழந்தைகள் பார்க்கும் படம் என ஆதிபுருஷ் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி? இந்த படத்தில் சில காட்சிகள் 18 வயசுக்கு மேல் நிரம்பியவர்கள் பார்க்கும் அடல்ட் காட்சிகளாக உள்ளதே என தணிக்கை செய்த அதிகாரிகள் மீதும் கேள்வி பாய்ந்துள்ளது.
மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட இயக்குநர், தயாரிப்பாளர் என படக்குழுவினர் யாருமே வராதது ஏன்? என்றும் அவர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி ஆஜர் ஆகும்படியும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.