சல்மான்கானுக்கு பிரபல தாதா பகிரங்க கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். அதோடு மும்பை அண்டர்வோர்ல்டு தாதாக்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வரும், போன், இ மெயில் மூலம் வந்த கொலை மிரட்டல் இப்போது நேரடியாகவே வந்துள்ளது.

1998ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், 'சிங்காரா' வகை மான் ஒன்றை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். 'சிங்காரா' மான் தங்கள் சமூகத்தின் புனிதமான விலங்கு என்பதால் அதற்கு பழிவாங்கும் வகையில் சல்மான் கானை கொல்வோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்திருந்தார். அதன் நீட்சியாக தற்போது நேரடி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தளபதியாக கருதப்படும் கோல்டி ப்ரார் தற்போது கனடாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே இங்குள்ள மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் சல்மான்கானுக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் “நாங்கள் சல்மானை கொல்வோம். நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். சல்மான்கான்தான் எங்கள் இலக்கு. அதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். நாங்கள் அதில் வெற்றியடையும்போது உங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

மும்பை அண்டர்கிரவுண்ட் தாதாக்கள், பாலிவுட் பிரபலங்களை இப்படி மிரட்டி பணம் பறிப்பது உண்டு. அப்படியான ஒன்றுதான் இது என்று கூறப்படுகிறது. என்றாலும் சல்மான்கானுக்கு அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதுவல்லாமல் சல்மான்கானும தனியாக பாதுகாப்பு படை ஒன்றை வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.