பரேலி, உத்தர பிரதேசத்தில் இரண்டரை வயது சிறுவனுக்கு, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில், தவறுதலாக, ‘சுன்னத்’ அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரேலி மாவட்டத்தில் உள்ள ஸ்டேடியம் ரோடு பகுதியில், எம்.கான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு, கடந்த 23ம் தேதி, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக இரண்டரை வயது சிறுவனை, அவனது பெற்றோர் அனுமதித்தனர்.
ஆனால் தவறுதலாக, சிறுவனுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைஅறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக் கூறியதாவது:
சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் உண்மையானது என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் குறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், மருத்துவமனையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, எம்.கான் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து மாநில அரசு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement