தென்காசி: பெண்களுக்கு முக்கியம் பொறுமையா? தைரியமா? என கல்லூரி மாணவி ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், பொறுமையை காட்டிலும் தைரியமே முக்கியம் என கனிமொழி எம்.பி. பதில் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மூன்றாண்டு கணிதம் படித்து வரும் கல்லூரி மாணவி முகிலா,பெண்களுக்கு பொறுமை முக்கியமா இல்லை தைரியம் முக்கியமா? என்ற கேள்வியை கனிமொழியிடம் முன் வைத்தார்.
இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி ஆரம்பத்தில் சற்று திகைத்து போனார். இரண்டுமே முக்கியம் என பதிலளிக்க ஆரம்பித்த அவர் ஒரு கட்டத்தில் பொறுமையை காட்டிலும் தைரியம் தான் பெண்களுக்கும் முக்கியம் என பளிச் பதிலளித்தார்.
மேலும், எல்லா நேரங்களிலும் நாம் தைரியமாக செயல் பட வேண்டும் என்றும் உங்களுடைய உரிமைக்காக தைரியமாக விட்டுக்கொடுக்காமல் போராட வேண்டும் எனவும் மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் இதே கேள்வியை தன்னிடம் கேட்டு இருந்தால்,உங்களுக்குப் பொறுமை தான் முக்கியம் என்று சொல்லி இருப்பேன் என கனிமொழி கூறினார்.
பெண்களுக்குப் பொறுமை ஏற்கனவே வழிவழியாக பொறுமையோடு இரு என்று சொல்லி வளர்ப்பார்கள் என்பதால் இதற்குப் பிறகு, பொறுமையை விட்டுவிட்டு தைரியத்திற்கு வருவோம் என்று கூறினார்.