‘காமராஜர்’, ‘தேசியத் தலைவர்’ வரிசையில் இப்போது ‘கக்கன்’ வாழ்க்கை வரலாறும் படமாகத் தயாராகிவருகிறது. எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர், விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர், தமிழகப் பொதுப்பணித்துறை உட்படப் பல பொறுப்புகளை வகித்த கக்கனின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகியுள்ளது.
இந்தப் படத்தில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் இதனைத் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தைப் பற்றி ஜோசப் பேபியிடம் பேசினேன்.
“இந்தப் படம் என் முப்பது வருஷ தவம்னுகூடச் சொல்லலாம். என் சொந்த ஊர் நாகர்கோவில், அதன்பின் கோவையில் செட்டில் ஆகிட்டேன். ‘கக்கன்’ தயாரிப்பதற்கு முன்னர், சினிமாவைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள விரும்பினேன். இதற்காகச் சில படங்களைத் தயாரித்தேன். ‘என் காதலி சீன் போடுறா’, ‘இரும்பு மனிதன்’ன்னு தமிழ் தவிர, கன்னடத்திலும் ஒரு படம் தயாரிச்சேன். அதன்பின்தான் ‘கக்கன்’ படத்தைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். இதுல கக்கனாக நானே நடிச்சது என்னோட பாக்கியம்னு சொல்லலாம். காமராஜரின் அமைச்சரவையில் இருந்தவர் கக்கன். நேர்மையான அரசியல்வாதி எனப் பெயரெடுத்தவர்.
அவர் மக்கள் பணியில் இருக்கும்போது வரும் பரிசுகள் தனக்குச் சொந்தமானது அல்ல என்று மலேசிய அமைச்சர் ஒருவர் தனக்குப் பரிசாகக் கொடுத்த தங்கப் பேனாவைக்கூட வாங்க மறுத்த எளிமையிலும் வலிமையான அரசியல்வாதி. அவர் ஒரு தெய்விகமான மனிதர்னுதான் சொல்லணும். அப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கையைப் படமா பண்ணியிருக்கிறது எனக்குக் கிடைத்த பேறு. இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதினதோடு, கக்கனாகவும் நடிச்சிருக்கேன். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபு மாணிக்கம் இயக்கியிருக்கார். தேவா இசையமைக்கிறார். வெங்கி ஒளிப்பதிவு செய்திருக்கார்.
கக்கனின் முழு வரலாற்றையும் சொல்லியிருக்கோம். இதன் படப்பிடிப்பைப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தவிர கக்கன் பிறந்து வளர்ந்த தும்பைப்பட்டி ஊரிலும் படமாக்கினோம். அதிலும், அவரது கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கிராம மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் உதவியும் மறக்க முடியாதத் தருணங்களாக இருக்கு. இந்தத் தலைமுறையினருக்குக் கக்கனின் மகத்துவத்தை உணர்த்தும் படமாக இருக்கும்” என்கிறார் ஜோசப் பேபி.