“ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்துக்குக் காரணம் பா.ஜ.க அரசின் கவனக்குறைவுதான்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம்.
காரைக்குடியில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ `பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோத்திருக்கின்றனர்’ என பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை விமர்சித்திருக்கிறார்.
இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் ஊழல்வாதிகள். பா.ஜ.க மட்டும் புனிதமான கட்சி என்று சொல்கிறார்களா… இது கொச்சையான விமர்சனம். பா.ஜ.க-வில் ஒருவர் உறுப்பினராகச் சேர்ந்து விட்டால் அவர் புனிதர், மாற்று சிந்தனையோடு வேறு அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளா? கொச்சையான விமர்சனங்களை வைக்கும் கட்சி பா.ஜ.க.
மோடி தன்னைப் பற்றி உலக அரங்கில் புகழ்ந்து பேச வேண்டும் என விரும்புகிறார். ரயில் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என்று புகழ்ந்து பேசுகிறாரே தவிர, சாதாரண பயணிகளின் பாதுகாப்பைக் கவனிப்பதில்லை, இதனால்தான் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது.
இதுவரைக்கும் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்துக்குக் காரணம் பா.ஜ.க அரசின் கவனக்குறைவுதான்” என்றார்.
அவரிடம், சீமானை ஹெச்.ராஜா அழைத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சீமானும் ஹெச்.ராஜாவும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தால் அது கலியுகம்தான்” என்றார்.