"ஆதாரம் இல்லையே".. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, மனைவி விடுவிப்பு..

வேலூர்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக அரசில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த வழக்கானது விழுப்பு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

இந்த சூழலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கானது வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 178-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இதனிடையே, இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜூன் 28-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, என்ன தீர்ப்பு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எழுந்தது. ஒருவேளை, தீர்ப்பு எதிராக வந்தால் பொன்முடி அமைச்சர் பதிவியில் நீடிக்க முடியுமா என்று கூட சில ஊடகங்கள் விவாதம் நடத்தி வந்தன.

இந்நிலையில், இந்த வழக்கானது, நீதிபதி வசந்தலீலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறிய நீதிபதி, அவர்கள் இருவரும் விடுவிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.