அலகாபாத்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படத்திற்குத் தடை கோரிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இதில் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
பிரபாஸ், சைஃப் அலி கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ரிலீசுக்கு முன்பு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களும் அனுமனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக எல்லாம் சொன்னார்கள்.
இப்படி மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. இருப்பினும், ரிலீஸ் ஆன பிறகு படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே அத்திக்காக்க வந்தது. இந்து அமைப்பைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆதிபுருஷ்: இதனால் ஆதிபுருஷ் படத்துக்குத் தடை கோரி பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்த வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. மத நூல்களில் இருந்து விலகி இருக்கவும், அவற்றைப் பற்றிய படங்களை எடுக்க வேண்டாம் என்றும் தயாரிப்பாளர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், பல்வேறு தரப்பினரும் படத்திற்குத் தடை கோரியுள்ள நிலையில், இது குறித்துப் பதிலளிக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரொம்ப தவறு: இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், “ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு அனுமதி தனிக்கை குழு அனுமதி அளித்தே தவறு.. ராமாயண பாத்திரங்கள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் பலரது உணர்வுகளைப் புண்படுத்துகிறது. குரான் அல்லது பைபிள் பற்றி படம் எடுக்கக் கூடாது என உங்களுக்குத் தெரிகிறது.. நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். எந்த மத நூல்களையும் தொடாதீர்கள். எந்த மதத்தையும் தவறாகக் காட்டாதீர்கள். நீதிமன்றத்திற்கு மதம் இல்லை.
குரான், பைபிள் குறித்து படம் எடுத்துப் பாருங்கள்.. அதன் பிறகு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும். திரைப்பட தயாரிப்பாளர்கள் பணத்தை மட்டுமே விரும்புகிறார்கள். எனவே, தயாரிப்பாளர் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இவர்கள் செய்திருப்பது ஒன்றும் ஜோக் இல்லை.
தவறாக இருக்கிறது: ராமாயணத்தின் பல கதாபாத்திரங்களைப் பலரும் வழிபடுகிறார்கள்.. அவற்றைப் படத்தில் எப்படிக் காட்டியுள்ளனர் என்று பாருங்கள்.. இந்தப் படம் ஜூன் 16 அன்று வெளியானது, இதுவரை பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் செய்யவில்லை. இந்தப் படத்தால் பலரது உணர்வுகள் புண்பட்டுள்ளது.
சிலரால் படத்தை முழுவதுமாகப் பார்க்கக் கூட முடியவில்லை. ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோரை நம்புபவர்களால் படத்தை முழுமையாகப் பார்க்க முடியாது. தனிக்கை குழு இந்தப் படத்திற்கு எப்படி அனுமதி அளித்தார்கள் எனப் புரியவில்லை. மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. மனுவில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் நம்புகிறோம் – உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இன்று இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தால், வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறினர்.
நோட்டீஸ்: மேலும், படத்திற்கு தடை விதிப்பது தொடர்பாகத் தணிக்கை குழுவுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. சமீபத்தில், இந்த வழக்கில் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லாவை ஒரு தரப்பாகச் சேர்க்குமாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சுக்லாவின் வசனங்கள் ராமாயணத்தைக் கோச்சைப்படுத்துவதாக இருந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.