"செந்தில் பாலாஜி தம்பியை ரகசியமாக பார்த்தீங்களா".. நிருபரின் கேள்வியால் ஆவேசமான அண்ணாமலை!

சென்னை:
“அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை லண்டனில் ரகசியமாக சந்தித்தீர்களா?” என நிருபர் கேட்ட கேள்வியால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமானார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவரிடம் எட்டாம் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இதனால் அங்கு ஒரு பெரிய வாக்குவாதமே ஏற்பட்டு பரபரப்பானது.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக லண்டனுக்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது ஒரு தொலைக்காட்சி நிருபர், “லண்டனில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை நீங்கள் ரகசியமாக சந்தித்தீர்கள் என தகவல் வருகிறதே..” எனக் கேள்வியெழுப்பினார்.

இந்த கேள்வியால் ஆவேசமான அண்ணாமலை, “யார் உங்களுக்கு தகவல் கொடுத்தது? ஸ்டாலின் உங்களுக்கு போன் போட்டு சொன்னாரா? இல்லையென்றால் ஸ்டாலின் மனைவி துர்கா உங்களிடம் சொன்னாரா? உங்களுக்கே இது முட்டாள்தனமான கேள்வியாக தெரியவில்லையா?

நீங்க என்ன வேணும்னாலும் கேள்வி கேட்பீங்க.. அதுக்கு நான் கோமாளி மாதிரி பதில் சொல்லிட்டு இருக்கணுமா.. இங்க நான் என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன். தகவல் வந்துச்சுனா யார்ட்ட இருந்து வந்துச்சுனு சொல்லுங்க நான் பதில் சொல்றேன். அதை விட்டுவிட்டு ஒரு கட்சியின் மாநிலத் தலைவரிடம் எட்டாம் கிளாஸ் பையன் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது. ஒரு ஜெர்னலிஸ்ட் மாதிரி கேள்வி கேளுங்க. டீக்கடையில் உட்கார்ந்திருப்பவர்கள் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது” என்றார் அண்ணாமலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.