Mahavir Karna: மீண்டும் தூசித் தட்டப்படும் விக்ரமின் மஹாவீர் கர்ணா.. படத்தின் இயக்குநர் தகவல்!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்துவருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும்வகையில் அடுத்தடுத்த பிராஜெக்ட்களை தேர்ந்தெடுத்து நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் வெளியாகின.

மீண்டும் தூசித்தட்டப்படும் விக்ரமின் மஹாவீர் கர்ணா படம்: நடிகர் விக்ரம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் பல படங்கள் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பட வாய்ப்புகள் இல்லாமல் தான் தவித்த ஆரம்ப காலகட்டத்தை மனதில் வைத்தோ என்னவோ, சேது படத்தில் மிரட்டினார். இவரது மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றனர். இவரை யூனிவர்சல் ஹீரோவாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

படத்தில் ஆதித்த கரிகாலனாக, நந்தினியின் காதலனாக பல பரிணாமங்களை இவரது நடிப்பில் பார்க்க முடிந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கேஜிஎப் மக்களின் வாழ்க்கை நிலையை இந்தப் படம் கருவாக கொண்டு உருவாகியுள்ளது.

படத்தின் சூட்டிங் கேஜிஎப்பிலேயே தொடர்ந்து பல நாட்கள் நடத்தப்பட்ட நிலையில், சென்னையிலும் பிரம்மாண்ட செட் போடப்பட்டு எஞ்சிய சூட்டிங் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்தில் வயதான மற்றும் இளைஞர் கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்ட விக்ரமின் மஹாவீர் கர்ணா படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை கேரளாவின் பத்மநாப சாமி கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. வரலாற்றுப் படமாக திட்டமிடப்பட்டிருந்த மஹாவீர் கர்ணா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இந்தப் படத்தை இயக்கவிருந்தார்.

மேலும் இந்தப் படம் 32 மொழிகளில் டப்பிங் செய்யப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். படத்திற்காக தன்னுடைய உடலை மாற்றிய விக்ரம், குதிரையேற்றத்திற்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் போர் காட்சிகளுக்காகவும் தயாராகியிருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இந்தப் படம் ஒருகட்டத்தில் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக இயக்குநர் ஆர்எஸ் விமல் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் படம் தடைகளை தாண்டி சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஆர்எஸ் விமல் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.