பெஷாவர், பாகிஸ்தானில் திருமணத்தை ஒட்டி ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேரை, அவர்களின் உறவினர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பட்கேலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில், உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டில் அனைவரும் உறங்கியபோது, அவர்களின் உறவினர்கள் சிலர் உள்ளே புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், அக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நபர்களை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இது குறித்து, மாகாணத்தின் பொறுப்பு முதல்வர் முஹமது ஆசம் கான் கூறுகையில், ”இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement