கஜினி போலீஸாக மாறிய சரத்குமார்

90களில் ஆக்சன் ஹீரோவாக, முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். கால மாற்றத்தில் கதாநாயகன் அந்தஸ்திலிருந்து மாறினாலும் தற்போது நடித்து வரும் படங்களில் நாயகனுக்கு இணையான அல்லது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக, வாரிசு படத்தில் விஜய்யின் தந்தையாக, கஸ்டடி படத்தில் நெகட்டிவ் போலீஸ் அதிகாரியாக, சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற போர் தொழில் திரைப்படத்தில் இறுக்கமான போலீஸ் அதிகாரியாக என விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் சரத்குமார்.

குறிப்பாக இப்போது அவர் நடித்து வரும் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக தான் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ஸ்மைல் மேன் என்கிற படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக தான் நடித்துள்ளார். அதேசமயம் அந்த படத்தில் கஜினி பட சூர்யா போல சட்டென்று ஒரு ஞாபக மறதிக்கு ஆளாகும் மனிதராக நடித்துள்ளாராம் சரத்குமார். குற்றவாளியை நெருங்கி பிடித்து விடுவாரோ என்று நினைக்கின்ற நேரத்தில், தான் எதற்காக அங்கே வந்தோம் என்பதே மறந்துபோய் வில்லனிடமே சென்று மன்னிப்பு கேட்டு கண்டு கொள்ளாமல் செல்வது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் தான் தொடர்ந்து தன்னை தேடி வருகின்றன என்றாலும் அவை கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தால் ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் சரத்குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.