பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு: மதுரை ஆட்சியர் ஜூலை 10ம் தேதி ஆஜராக உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நில நிர்வாக ஆணையரும், மதுரை மாவட்ட ஆட்சியரும் ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூர் அம்பலக்காரன்பட்டியைச் சேர்ந்த ரமணி கோபால், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், “மேலூர் தாலுகா அம்பலக்காரன்பட்டியில் தனியார் பட்டா நிலத்தை 1994-ல் நானும், என் மனைவியும் வாங்கினோம். அந்த நிலத்துக்கு என் பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அந்த இடம் பஞ்சமி நிலம் என்று கூறி பட்டா வழங்க மறுத்துவிட்டனர்.

இதனால் பட்டா கேட்டு 2015-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி எனக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே, அந்த நிலம் திடீரென பஞ்சமி நிலம் என்று கூறி பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரது விசாரணையில் என் நிலம் பஞ்சமி நிலம் இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: “மனுதாரருக்கு பட்டா வழங்க உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் வருவாய்த்துறையினர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் நில நிர்வாக ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கிறது. இருவரும் ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.